search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை"

    விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #AIIMS #TNMinister #Vijayabaskar
    சென்னை:

    சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.


    எனவே எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் ஏற்படாது. எம்ய்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்தவித மாற்றமும் இல்லை. மேலும், விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AIIMS #TNMinister #Vijayabaskar
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiAIIMS
    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    தோப்பூரில் மத்திய மருத்துவ கட்டுமான குழு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது எடுத்த படம்


    ‘பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

    மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று உறுதி அளித்தார்.

    இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 6-ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும்? என்பதையும் அறிக்கையில் குறிப்பிடும்படி உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.  #MaduraiAIIMS
    மதுரை துணைக்கோள் நகரத்தில் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #TNMinister #RBUdhayakumar
    மதுரை:

    மதுரையில் இருந்து நெல்லைக்கு நடத்துனர் இல்லாத விரைவு பஸ் சேவையை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார்.

    திருமங்கலத்தில் இருந்து 6 விரைவு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விரைவு பஸ் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் நடத்துனர் இல்லாத பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து திருமங்கலம் வழியாக நெல்லைக்கு 6 விரைவு பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் நடத்துனர்கள் அதற்குரிய ஸ்டே‌ஷன்களில் இருப்பார்கள். இந்த பஸ் சேவை மூலம் மக்கள் விரைவாகவும், பாதுகாப்புடனும் செல்ல முடியும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படுவதை புள்ளி விவரங்களுடன் எடுத்துக்கூறினார்.

    சட்டம், ஒழுங்கை காப்பாற்றக்கூடிய இந்த அரசின் யுக்தியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் மாற்றுக்கொள்கை, லட்சியம் உள்ளவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

    எந்த ஒரு கட்சிக்கும் லட்சியம், கொள்கை, எதிர் பார்ப்பு இருக்கும். அதில் தவறு இல்லை. தங்களது கட்சி தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக லட்சியங்களையும், கொள்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்வது மரபு. அது தான் வாடிக்கை.

    அந்த வாடிக்கையே சில சமயங்களில் வேடிக்கையாகவும் அமைவது உண்டு.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைந்ததில் 7 கோடி தமிழர்களுக்கும் பங்கு உண்டு. வருவாய்த்துறை அமைச்சர் என்ற முறையில் அதற்கு உரிய நிலத்தை ஆர்ஜிதம் செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற பணியில் மன நிறைவோடு செயல்பட்டுள்ளேன்.


    எய்ம்ஸ் அருகே துணைக்கோள் நகரம் அமைய இருக்கிறது. இது மறைந்த முதல்-அமைச்சர் அம்மா கண்ட கனவு திட்டம் ஆகும்.

    இந்த துணைக்கோள் நகரத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் 5 ஆயிரம் வீடுகளும், வீட்டு வசதி வாரியம் மூலம் 5 ஆயிரம் குடியிருப்புகளும் மொத்தம் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

    மேலும் பள்ளி, கல்லூரிகளும் அங்கு வர உள்ளது. அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    பஸ் போர்ட்டும் அமைவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கோவை, சேலம், அடுத்து மதுரைக்கு பஸ் போர்ட் வருகிறது. அதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு தேவையானதை விட கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் அதிகாரி குணாளன், நிர்வாகிகள் வெற்றிவேல், ஜான் மகேந்திரன், அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  #TNMinister #RBUdhayakumar
    எய்ம்ஸ் மருத்துவமனையை யார் கொண்டு வந்தாலும் மதுரைக்கு வந்தது சந்தோ‌ஷம் தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #maduraiaiims

    திருப்பரங்குன்றம்:

    திருநகர் அருகே விளாச்சேரியில் இன்று நடந்த பரிதிமாற் கலைஞரின் 148-வது பிறந்த நாள் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனையை யார் கொண்டு வந்தாலும் மதுரைக்கு வந்தது சந்தோ‌ஷம் தான். ஊர் கூடி தேர் இழுத்ததால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது.

    இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆட்சி செய்வதால் தமிழிசை சவுந்தரராஜன் எய்ம்ஸை கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று சொல்வதில் தவறில்லை. அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எய்ம்ஸை கொண்டு வந்ததில் தமிழக முதல்வருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் பங்கு உண்டு. பா.ஜ.க. மட்டும் கொண்டு வந்தது என்றால் 2003-ம் ஆண்டே கொண்டு வந்திருக்கலாமே? எய்ம்ஸ் தற்போது வந்ததற்கு தமிழக அரசின் முயற்சியே காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #maduraiaiims

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதால் மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு தன் மீது கோபம் உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
    மதுரை:

    மாமதுரை மக்கள் இயக்கம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அளித்ததற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

    மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற எய்ம்ஸ் நன்றி அறிவிப்பு பொது கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

    பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

    மத்தியில் பா.ஜ.க.ஆட்சி வருவதற்கு முன் பல காலம் காங்கிரசும், 10 ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியும் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தனர்.

    10 மத்திய மந்திரிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருந்த போதிலும் 10 கோடிக்கான திட்டத்தைக் கூட மதுரைக்கு கொண்டு வராதவர்கள் தி.மு.க.காரர்கள்.

    மத்தியில் நிதி அமைச்சராக உள்துறை அமைச்சராக இருந்தவர்கள் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்தனர்.

    மத்தியில் பா.ஜ.க.வின் மோடி ஆட்சி முதல் பட்ஜெட்டிலேயே தமிழகத்திற்கு எய்ம்ஸை அறிவித்தது.

    எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டவுடனே நான் யோசித்தது தமிழகத்தில் எந்த பகுதியில் எய்ம்ஸை அமைப்பது என்பது தான்.

    மதுரை தோப்பூரை பற்றி எனக்கு தெரியாது. தென் பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பயன் பெறும் என்று தான் மதுரையில் எய்ம்ஸ் வர பாடுபட்டேன். எந்த மாவட்டத்திற்கும் எய்ம்ஸ் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை.

    மதுரைக்கு வர வேண்டும் என்பதில் நான் குறியாக செயல்பட்டேன். இதனால் என் மீது பல எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரிகளுக்கும் கோபம் கூட இருக்கும்.

    நான் மத்திய சுகாதார துறை மந்திரி நட்டாவை சந்திக்கும் போதெல்லாம் எய்ம்ஸை பற்றி தான் பேசுவேன். இதனால் என் பெயரேயே எய்ம்ஸ் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


    எய்ம்ஸை தமிழகத்திற்கு அளித்த பிரதமர் மோடிக்கு ஏன் தமிழக அரசு நன்றி தெரிவிக்கவில்லை.

    தமிழகத்திற்கு 6 மாதத்திற்கு உள்ளாக மட்டும் ரூபாய் ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்து உள்ளது மோடி அரசு.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

    பொது கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    தரமான சிகிச்சையை தென் தமிழக மக்கள் பெறவே மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

    கர்நாடகாவில் குமாரசாமி பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இல்லாமலே ஆட்சிக்கு வந்தது திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்ததால் தான். ஆகவே தான் ஸ்டாலினும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று தான் ஸ்ரீரங்கம் வந்து சென்றுள்ளார்.

    காவிரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் வந்தே தீரும். எதிர்கட்சிகள் கேட்டதை போல காவிரி ஆணையமும் அமைக்கப்பட்டு விட்டது. அதன் ஒழுங்காற்று கூட்டமும் நடத்தப்பட்டு விட்டது. இனி 50 வருடங்களுக்கு மோடி ஆட்சி தான் இந்தியாவில் நடக்க போகிறது.

    தமிழகத்தில் கூடிய விரைவில் பா.ஜ.க.ஆட்சி மலர இருக்கிறது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் என் உயிர் போகாது.

    இவ்வாறு அவர் பேசினார். #AIIMS #BJP #TamilisaiSoundararajan #PonRadhakrishnan
    எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #BJP #PMK

    சென்னை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி அரசு கொண்டு வந்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையில், இம்மருத்துவமனை அமைவதற்கு பா.ம.க.தான் காரணம் என அன்புமணி ராமதாசும் டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். இதனால் டுவிட்டர் தளத்தில் அன்புமணிக்கும், தமிழிசைக்கும் காரசார கருத்து மோதல் வெடித்தது.

    டாக்டர் தமிழிசையை கண்டித்து தமிழக பா.ஜனதா அலுவலகத்தை பா.ம.க. வினர் முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் போலீசார் குவிக்பபட்டனர்.

    சாலையின் 2 பக்கங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பா.ம.க. தொண்டர்கள் இந்தி பிரசார சபா அருகே முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் திரண்டனர்.

    அவர்கள் அங்கிருந்து பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அவர்களை பஸ்களில் ஏற்றிச் சென்றனர்.

    அப்போது பா.ஜனதா தொண்டர்கள் 20 பேர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் பஸ்சில் இருந்த பா.ம.க. தொண்டர்கள் கீழே இறங்கினர். இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    போலீசார் சிரமப்பட்டு இரு தரப்பினரையும் ஆங்காங்கே தள்ளி விட்டனர். பா.ஜனதாவை சேர்ந்த மூர்த்தி என்பவரை போலீசார் பிடித்து வேனில் ஏற்றினர்.


    இதைத் தொடர்ந்து மற்ற தொண்டர்கள் கலைந்து சென்றார்கள். பின்னர் பா.ம.க.வினரை பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    ஏ.கே.மூர்த்தி தலைமையில் சுமார் 150 பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியில் களேபரம் நடந்து கொண்டிருந்தபோது பா.ஜனதா அலுவலகத்தில் கட்சியின் மையக்குழு கூட்டம் தேசிய செயலாளர் முரளிதரராவ் தலைமையில் நடந்தது.

    மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், நரேந்திரன், தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் கேசவ விநாயகம், மோகன்ராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

     ஏ.கே.மூர்த்தி தலைமையில் பா.ஜனதா அலுவலகம் நோக்கி பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்ற காட்சி. #BJP #PMK

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வந்தது ஒரு வெற்றி வரலாறு என்று ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. கூறினார்.

    திருப்பரங்குன்றம்:

    காவிரி நதிநீர் பிரச் சினையில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதையொட்டி திருப்பரங்குன்றத்தில் நடந்த காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

    காவிரி பிரச்சனை என்பது பல ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் பிரச்சினை ஆகும். 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் அப்போதிருந்த கருணாநிதி தன் மீது உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கமறுத்து விட்டதோடு காவிரி வழக்கில் தமிழக அரசின் சார்பில் போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற்றார்.

    காவிரி பிரச்சனையில் புரட்சித்தலைவர் முதன் முதலாக உச்சநீதிமன்றம் சென்றார். அதனை யொட்டி புரட்சித்தலைவி அம்மா பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

    அதில் சென்னை கடற்கரையில் 80 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்து காவிரிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார்.

    மேலும் 2013ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பைமத்திய அரசிதழில் அம்மா வெளியிடச் செய்து தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைக்க உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

    அம்மாவின் மறைவிற்குப் பின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசுஅமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றது மட்டுமல்லாது காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசிதழில் வெளியிடச்செய்துகாவிரி நீர் பிரச்சினையில் ஒரு நிரந்தரதீர்வை பெற்று மாபெரும் வரலாற்றை அம்மாவின் அரசு படைத்துள்ளது

    டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று அம்மா கடுமையாக போராடினார் தொடர்ந்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அம்மாவின் இந்த கனவை நனவாக்கும் வண்ணம் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மத்திய அரசிடம் கடுமையாக போராடி எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வந்து மாபெரும் ஒரு வெற்றி வரலாற்றை படைத்துள்ளனர்.

    இந்த எய்ம்ஸ் மருத்துவ மனை மூலம் தென் மாவட்டத்திலுள்ள 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவது மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளா மாநிலத்து மக்களும் பயன் பெறுவார்கள்.

    எய்ம்ஸ் மருத்துவ மனைரூ.1500 கோடியில் உருவாகிறது. இதில் மிகச் சிறப்பு என்றால் இந்த மருத்துவமனை மதுரை புறநகர் பகுதியைச் சேர்ந்த தோப்பூரில் அமைய உள்ளது.

    மதுரை புறநகர் பகுதிக்கு இதை உருவாக்கிகொடுத்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் ஜெயலலிதா ஆசை நிறைவேறி உள்ளதாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
    மதுரை:

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் ஜெயலலிதா ஆசை நிறைவேறி உள்ளதாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் அம்மா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    எய்ம்ஸ் அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை தோப்பூரில் உள்ளது என்றும் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளிடமும் கோரிக்கை வைத்தார்.

    இப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசை நிறைவேறி விட்டது.

    நாட்டின் முக்கிய நகரமாக மதுரையும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. எய்ம்ஸ் அமைக்க உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #AIIMS
    மதுரைக்கு எய்ம்ஸ் வந்து விட்டதால் எனது பதவி காப்பாற்றப்பட்டு விட்டதாக திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
    மதுரை:

    காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகத்தில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட நாள் முதல், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆசியுடன் எய்ம்ஸ் மதுரையில் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து போராடி வந்தது.

    மேலும், மதுரையில் எய்ம்ஸ் அமையாவிட்டால் எனது அமைச்சர் பதவியைக் கூட துறக்கத் தயார் என பல பொதுக்கூட்டங்களில் நான் பேசினேன்.

    மத்திய அரசு தமிழகத்தில் மதுரை, தஞ்சை என 5 இடங்களில் எய்ம்ஸ் அமைக்க இடத்தை ஆய்வு மேற்கொண்டு இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கு அனைத்து வசதிகளும் நிறைந்த இடமாக உள்ளது என தீர்மானித்து, தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க ஆணை பிறப்பித்ததை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் ஆணையை வெளிப்படுத்தியது மேலும், இங்கு அமைக்க 5 நிபந்தனை ( குடிநீர், மின்சாரம், தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடமாகவும், நில மீட்பில் சிக்கலின் மை உள்ளிட்ட )களையும் மத்திய அரசு அறிவித்தது. இதற்கெல்லாம் உகந்த இடமாக மதுரை தோப்பூர் அமைந்துள்ளது. இதனால் இனி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை. எனது அமைச்சர் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.

    இந்த மருத்துவமனை அமைந்தால், ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையால், தமிழகத்தில் கடைக்கோடியில் இருப்பவர்களும் இங்கு வந்து எளிதில் பயன்பெறும் வகையில் அமையும்.

    மேலும், சேலம் சென்னை 8 வழிச்சாலையால் எந்த ஒரு விவசாயிக்கும் பாதிப்பு இருக்காது, விவசாயிகளுக்கு பாதுகாப்பும் அவர்களது வளர்ச்சிக்கும் என்றென்றும் உறுதுணையாக அ.தி.மு.க. செயல்பட்டு வரும். சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் சுயநலத்திற்காகவும் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர். அது எடுபடாது.

    சேலம் சென்னை 8 வழிச்சாலை அமைந்தால் ஒரு உயிர் கூட விபத்தில் பலியாகாது என்பதை, சேலம் மக்களுக்கு சத்தியம் செய்கிறேன். மேலும், மதுரை மாவட்டத்திற்கு பஸ்போர்ட் அமைப்பதற்கு முதலிடம் வகிப்பது திருப்பரங்குன்றம் தொகுதி. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுரையில் பறக்கும் சாலை திட்டமும் வெகு விரைவில் வருவதற்கு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இது போன்ற வியக்கத்தக்க திட்டங்கள் அனைத்தும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், இதனால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் சரவணன், நீதிபதி, மாணிக்கம், பெரிய புள்ளான், நிர்வாகிகள் வெற்றிவேல், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பன்னீர்செல்வம், முத்துக்குமார், முனியாண்டி, மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமையாமல் போனது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், மதுரையில் எய்ம்ஸ் அமைவதால் பொறாமை இல்லை வருத்தம் தான் என தெரிவித்துள்ளார்.
    பெருந்துறை:

    மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அறிவிக்கப்பட்டதோடு மருத்துவமனையை எங்கு அமைப்பது? என இடம் தேர்வு செய்யும் பணியும் தொடங்கியது. மத்திய அரசு குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் பல இடங்களை ஆய்வு செய்தனர்.

    அதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், தஞ்சை ஆகிய இடங்கள் முன்னணி இடத்தில் இருந்தது.

    பெருந்துறையில் மருத்துவக்கல்லூரியின் பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அந்த இடம்தான் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    மத்திய குழுவினரும் போதுமான இடவசதி உள்ளது என்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறி விட்டு சென்றனர்.

    இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் கிட்டத்தட்ட அமைந்துவிடும் என ஈரோடு மாவட்ட அரசியல் தலைவர்கள் உறுதியாக நம்பி இருந்தனர்.

    தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தார். சட்டசபையிலும் இது பற்றி பேசினார்.

    கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரனும் எய்ம்ஸ் மருத்துவமனை கொங்கு மண்டலத்தில் அமைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதே போல பல கட்சியினரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

    ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் என நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும் அது மதுரைக்கு சென்றது கொங்கு மண்டல மக்களுக்கு ஏமாற்றம்தான்.


    எப்படியோ எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வந்தால் போதும் என தங்களுக்குள்ளே ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததற்கு காரணம் என்ன? என அலசி பார்த்தபோது சில தகவல்கள் கிடைத்தது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் அதன் அருகேயோ, நடுவிலோ ரோடு இருக்கக்கூடாது. ஆனால் பெருந்துறையில் இடம் தேர்வு செய்த இடத்தின் மத்தியில் ரோடு இருந்தது.

    இதனால் காற்று மாசு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படி காசு மாசு ஏற்பட்டால் அது மருத்துவமனைக்கு உகந்ததாக இருக்காது. எனவே தான் கடைசி நேரத்தில் பெருந்துறை நிராகரிக்கப்பட்டு மதுரைக்கு சென்றதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாதது கொங்கு மண்டல மக்களுக்கு வருத்தம் கலந்த ஏமாற்றமே என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.

    இது பற்றி தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது:-

    பெருந்துறை தோப்பு பகுதியில் அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூர் பக்கம் அமைய உள்ளதால் எங்களுக்கு பொறாமை இல்லை. சிறிய வருத்தம் கலந்த ஏமாற்றம் தான்.

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்.

    அந்த வகையில் எனது தொகுதியில் மருத்துவமனை அமைந்திருந்தால் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய கொங்கு மண்டல மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

    ஆனால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை பக்கம் சென்றுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பயன் பெறுவார்கள். எப்படி பார்த்தாலும் மகிழ்ச்சி அடைவது தமிழக மக்கள் தானே!

    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார். #AIIMS #AIIMSinMadurai
    ×